Friday, April 4, 2014

வண்ணதாசனின் வீடு

95ன் மிக ஆரம்பம். வண்ணதாசன் LHOல் இருப்பதாக என் நண்பன் கூறினான்.
எங்களுக்கென்று ஒரு அழகான ஞாபக அலமாரியை உருவாக்கத் துவங்கிய நேரம்.
80களின் மத்தியில் பழமையான நெடி கொண்ட காகிதங்களில் வண்ணதாசன் அறிமுகம்
கிடைத்து பிரமிக்க ஆரம்பித்திருந்தது.

அரிய பொக்கிஷங்களாக பழைய கணையாழிகளும், தீபம் இதழ்களும் சேகரித்து
இருந்தோம். பிரத்யேகமான ஒரு தீபம் இதழில் ஆதவனின் "இரவுக்கு முன்பு
வருவது மாலை"யும் , வண்ணதாசனின் "சபலம்" (கிட்டத்தட்ட குறுநாவல்) கதையும்
படித்து, அதனை ஒரு பொக்கிஷத்திற்கு இணையாக பத்திரப்படுத்தி இருந்தோம்.
இப்போது வண்ணதாசனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது.

எப்போதும் நெரிசலாகத் தென்படுகிற LHOல், அன்று மனிதர்கள் தென்பட்டார்கள்.
அழகான மனிதர்கள்.மிகப் பழைய அந்த கட்டிடத்தின் சற்றேப் பெயர்ந்த தரைகளில்
அன்பு இறைந்து கிடந்தது. வண்ணதாசனை விசாரிக்கையில் "கண்ணதாசனா" என்று
கிடைத்த பதிலில் உற்சாகமுற்று (வண்ணதாசனை தெரிந்த வகையில் நான் இவர்களில்
உயர்ந்த ரசனை உடையவன் என்ற ஹோதா), கடைசியில் கல்யாணசுந்தரத்தைக் கண்டு
பிடித்தேன். அந்தப் பகுதியில் அப்போது வேலை பார்த்து வந்த மற்றொரு
பிரபலஸ்தர் (பிரபல நாடக நடிகர்), அவரைத் தாண்டி, அவரைக் கண்டுகொள்ளாமல்
இன்னொருவரைத் தேடி ஒருவன் வரக்கூடும் என்பதை எதிர் பாராதது போல்
இருந்தார்.

வண்ணதாசன் எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சியைத் தந்து விடவில்லை. நான்
எதிர்பார்த்த அதே அமைதி, அன்பு வழிகிற கண்களுடன் என்னை எதிர் கொண்டார்.
பக்குவம் இல்லாத ஒரு சிறுவன், மிகவும் புத்திசாலித்தனமாக எழுதுகிற
ஒருவரின் இலக்கியத்தை, அவர் முன்னமே வர்ணிப்பதை எவ்வாறு ஏற்றுக் கொண்டார்
என்பதை, இத்தனை வருடம் கழித்தும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன்
பிறகு, ஏறக்குறைய 6 வருடம் தொடர்ந்த சந்திப்புகள், அவர் என்னை
ஏற்றுக்கொண்டார் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

வியர்வையில் வீடு திரும்புகிற பெருங்கூட்டத்திற்கு மத்தியில் நான் அவரது
போய்க்கொண்டிருப்பவள் கதையின் வரிகளை ரசித்து ஒப்புவித்தது
மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் பிடித்த வரிகளான " வாரப் பத்திரிக்கைகளில்
படிந்து கிடக்கிற நூலாம்படைகளில் என்னுடைய தேர்ந்த வாசகச் சிறகுகள்
சிக்கிக் கொண்டுவிடக் கூடாதே என்பதற்காக விலகி, லைப்ரரியின் அச்சாணித்
தட்டுகளின் தூசியில் மூச்சு முட்டித் திரிகிற என் போன்றவர்களுக்கு இது
போன்று நிகழ்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை" என்பதை மந்திரித்து
விட்டவன் போல ஒரு உச்சகட்ட லாகிரியில் சிலாகித்ததை, அவர் ஒரு
புன்முறுவலால் ஏற்றுக்கொண்டார். எப்போதும் மௌனம் வழிகிற அந்தக் கண்கள்
நெகிழ்ந்திருந்தன. அடுத்த சில தினங்களில், என்னைத் தேடி ஒரு "Greeting
Card" அனுப்பியிருந்தார். விலை மதிக்க முடியாத ஒரு கவிதைஅதன் பின்
பக்கம். வாசம் வீசுகிற மலரையும், அதனைத் தாங்குகிற ஒரு காம்பையும் பற்றிய
கவிதை அது.

அதன் பிற்பாடு நிறைய சந்திப்புகள். எட்டாக மடித்த என்னுடைய சில
படைப்புகள் (அதையெல்லாம் நானே பிற்பாடு குப்பையில் எறிந்து விட்டேன்),
விருட்சம் பத்திரிகையில் வந்த என்னுடைய கவிதைகள்(?), அந்நாளைய "பாக்யா"
பத்திரிகையில் வந்த ஒரு கதை என்று, நான் அவரை நிர்பந்தித்து இருந்தாலும்,
தமிழில் என்றைக்கேனும் "ஞானபீடம்" வாங்குகிற தகுதி படைத்த ஒரு மகா
எழுத்தாளனோடு நான் சகஜமாக உரையாட முடிகிறது என்பதே என்னைத் தரை மேலே 1/2
அடி உயரத்தில் உலாவச் செய்தது.

விருட்சம் ஆசிரியர் என்னிடம், ஞானக்கூத்தன் அவர்களின் வரவிருந்த, இன்னம்
அச்சில் ஏற்றப்படாத கவிதைத் தொகுப்பைப் காட்டி, என் ஞாபகத்தில்
இருந்து ஏதேனும் விடுபட்ட கவிதை உள்ளதா என்று கேட்டு இருந்தார். நான்
உடனே கணையாழில் வந்த, அத்தொகுப்பில் விடுபட்ட சில அற்புதமான கவிதைகளைக்
(சமயங்களில் மாமா என்று அழைக்கவே துவங்கி விட்ட சிறுவர்கள் தொலைவில்
சென்று ஆடினர் என்னைக் கண்டால்... உள்ளிட்ட சில கவிதைகள்) கூறினேன்.

இச்சம்பவத்தை, நான் வண்ணதாசனிடம் பெருமையாகக் கூறும்போது, அவரைப்
பார்க்க, கவிஞர் விக்ரமாதித்தன் வந்திருந்தார். அப்போது, நான்
வண்ணதாசனிடம், ஞானக்கூத்தன் எழுதியதாக ஒரு கவிதையைக் கூறி, இதுவே அவரின்
சிறப்பான முதல் ஐந்து கவிதைகளில் ஒன்று என்று கூறினேன். இருவரும்
புன்னகைத்தனர். அந்தக் கவிதை - " இறக்கை சிலுப்பும் காக்கையை , எச்சில்
இலையைத் தின்றபடி யோசனை செய்யும் பசுமாட்டை, நனைந்த குரலில் பூ விற்று
நடந்து போகும் சிறு பெண்ணை ..... " என்று கஷ்க்கத்துக் குடை போல கிழிந்து
போன ஒரு சிறுவனின் வாழ்க்கை பற்றியது. 80ல் "ழ" ல் வந்திருந்தது.



இது ஞா.கூ. விடம் தெரியப்படுத்தப் பட்டதா என்று கேட்டார். நான், ஆமென்று
கூறி, ஆனால், ஞா.கூ, இதை மறுதலித்து, கவிதை அற்புதமாக இருந்தாலும், அதைத்
தான் எழுதவில்லை என்று கூறி விட்டதாகக் கூறினேன்.

மறுபடியும் புன்னகையில் அன்பு வழிந்தது.

இம்முறை, விக்ரமாதித்தன், இந்தக் கவிதை "கல்யாண்ஜி" எழுதியது என்றார்.
எனக்கு அது அதிர்ச்சி அளித்தாலும் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும்
நான் விடாமல், கல்யாண்ஜியின் (கணையாழியில் வந்தது) கவிதை ஒன்று
(.....இன்னொரு திரை உயர்கையில் நான் உங்களுக்கு மத்தியிலோ அல்லது
அருகாமையிலோ அமர்வதை மறுப்பதிற்கில்லை. வந்து விடுவேன் தாமதமாகவேனும்
ஆனால் நிச்சயமாக) வேகமான நடையில் கூறினேன். ஆனால், கல்யாண்ஜி, இதைத் தான்
எழுதியதாக ஞாபகமில்லை என்று கூறியது மறுபடியும் அதிர்ச்சியாக இருந்தது.

பிரமிள் உடனான என்னுடைய சந்திப்புகளை ஒருமுறை கூறிய போது, அவர்
கையெழுத்திட்ட அவரது கவிதைத் தொகுப்பு ஒன்றை வாங்கியதாகக் கூறினேன்.
பிரமிள் என்கிற தருமு சிவராமுவைப் பற்றி மிகவும் சிலாகித்த வண்ணதாசன்,
அத்தொகுப்பைத் தான் பார்க்க முடியுமா என்று கேட்டார். ஒரு சிறு
குழந்தையின் பரவசத்தில் மறுநாளே அப்புத்தகத்தைக் கொண்டு கொடுத்தேன்.

அப்போது நாங்கள் அண்ணா நகரில் குடியேறி இருந்தோம். ரயில் பயண
சந்திப்புகள் தடைப்பட்டன. ஒரு காலைப் போதில், எனக்கு தொலை பேசி வந்தது.
வண்ணதாசன். அன்று, தான் மாற்றலாகி திருநெல்வேலி செல்லப் போவதைத்
தெரிவித்தார். என்னுடைய புத்தகத்தைத் திரும்ப வாங்கிப் போக முடியுமா
என்று கேட்டது என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. மதியம் அவரைப்
பார்க்க விரைந்தேன். எவ்வித மாற்றமுமின்றி அதே புன்னகை. என்னுடைய
புத்தகத்தை (அழகான அட்டையிட்டு இருந்தேன் - அதே மடிப்புக் கலையாமல்)
என்னிடம் திருப்பிக் கொடுத்தார். நான் அதனை என் அன்பளிப்பாக ஏற்றுக்
கொள்ளுமாறு கூறினேன். இம்முறை புன்னகையில் மறுப்பு இருந்தது. "தர்மு
சிவராமு" மிகப் பெரிய கவிஞர். அவரே அவர் கைப்பட எழுதிக்
கொடுத்திருக்கிறார். அவர் இப்போது இல்லாவிட்டாலும் (அவ்வருடம் பிரமிள்
காலமாகி விட்டிருந்தார்), அவர் ஞாபகம் இப்புத்தகத்தில் எப்போதும்
இருக்கும். ஆதலால் இதனை நீங்கள் வைத்திருப்பதுதான் சரி என்று திருப்பிக்
கொடுத்து விட்டார். ஒரு பெரும் உணர்ச்சியில் சிக்கியிருந்த என்னைப்
பார்த்து, உலகம் மிகவும் சின்னது கணேஷ்ராம். நாம் மறுபடியும் சந்திக்க
நேரும் என்றார். ஆனால் இன்றுவரை உலகம் பெரியதாகவே இருக்கிறது.

என்னால் பதில் கூற இயலவில்லை. விக்ரமாதியன் கவிதை ஒன்று "எனக்கது
சூரியன், சூரியனுக்கு நான் யார்" என்று வரும். அது போல், எனக்கு
வண்ணதாசன் ஒரு பெரிய பொக்கிஷம். ஆனால் அவருக்கு, என்னைப் போல் லட்சக்
கணக்கில் ரசிகர்கள், இன்னமும், மேல்தட்டு ரசனையில் வரக்கூடும் என்று
தோன்றியது.

அடுத்த சில மாதங்களில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருடைய விலாசம்,
இம்முறை, எனக்கு, அந்த பிரபல நாடக நடிகரிடமிருந்து கிடைத்து விட்டது.
உடனே எனக்கு அவரிடம் இருந்து பதில் வந்து விட்டது.

(அதன் scanned copy யை இதனுடன் இணைத்துள்ளேன்)

ஒரு குழந்தையின் உற்சாகத்தில், பால்யத்தில் அபூர்வமாகக் கிடைக்கிற
மயிலிறகைப் பத்திரப் படுத்தும் நேர்த்தியில், இக்கடிதத்தைப்
பத்திரப்படுத்தி இருக்கிறேன். 14 வருடங்கள். ஒரு வனவாசம். அவர்,
தன்னுடைய வீட்டைப் பற்றிக் கூறியிருந்தது.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்ட என்னுடைய வீட்டையும், அதே கனமான மனத்தில்
போன மாதம், நான் விற்று விட்டேன். என்ன ஆச்சர்யம், வண்ணதாசனும் அவருடைய
பசுமை நிறைந்த அவ்வீட்டை விற்று விட்டார்.

வீடுகளை சுலபமாக விற்று விட முடிகிறது. ஆனால் ஞாபகங்களை மட்டும் விற்க
முடிவதில்லை. உள்ளங்கைக்குள் குளிர்ச்சியூட்டுகிற அந்த அறைச்சாவி (பெயர்
தெரியாமல் ஒரு பறவை - நான் தானோ அது?) தருகிற சுகம் இதிலும் தொடரத்தான்
செய்கிறது.

கள்ள வாரணம்

மனிதர்  வணங்கும்  சாமிகளில்
ஒற்றைக் கொம்பு கணபதியை
எனக்கு  மிகவும் பிடிக்கும்
வேறெந்த தெய்வம் வணங்கிய பின்
ஒப்புக்கொள்ளும் நாம் உடைக்க..

ஞானக்கூத்தன்

பொதுவாகவே பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வந்து ப்ரதிஷ்டை செய்வது
உசிதம் என்பதாக ஒரு ஐதீகம். இதற்கு ஏதேனும் விசேஷமான காரணம் அல்லது கதை இருக்கலாம் என்று தோன்றியது.

பயம்தான் கடவுள் என்று சொல்வது உண்டு. அப்படிச் சொல்வதிற்கும்
பயமாயிருக்-கிறது. கண்ணையேத் தொழிலாகக் கொண்டு ஜீவனம் நடத்தும் போது, என்னத்தையாவது ஏடாகூடமாகப் பேசி, சாமி கண்ணைக் குத்தி விட்டால் என்ன செய்வது?

அப்படியெல்லாம் பயப்பட வேண்டாம் என்பதற்கு புராண காலத்திலேயே ஆதாரம் இருக்கிறது.

க்ரஹ சஞ்சாரங்களை அதுவும் சனீஸ்வரனின் சஞ்சாரத்தைத் தடுக்க இயலாத
கடவுள்களை நாம் வெகுவாகத் தண்டித்து இருக்கிறோம். ஒன்றுக்கு மூன்றாகக் கண்களை, அதுவும் சம்ஹாரத்திற்கென்றே கொண்ட சிவபெருமானின் அரையாடையை
உருவி விட்டு, போறும் போறாமல் ஒரு புலித் தோலை உடுத்தி விட்டு, அவரது
முழு கவனத்தையும் அவரது உடை மேலேயே இருக்குமாறு செய்ததில், அவரால் அவரது
வேலையை முழுமையாக செய்ய முடியாமல் போய் விட்டது. விளைவாக, பாவிகள்
பெருகி எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என்று ஆகி விட்டது. இதுவும்
போதாமல், படையும் நடுங்குகிற பாம்புகளை அவரது மேலேயே ஊறவிட்டு அதிக பட்ச
தண்டனையும் கொடுத்தாகி விட்டது.

பாம்பு மட்டுமல்ல, எலியைக் கண்டாலும் படைகள் நடுங்கும். 83 உலகக்
கோப்பையில், இது ஊர்ஜிதமானது.

இந்தியர்களாகிய நாம் பொதுவாகவே எதற்கும் பயப்படுகிறவர்கள். அதுவும், தடி
தடியாக, 8க்கு 10 அளவில், கடோத்கஜன்கள் போல, ஒவ்வொருத்தனும், cricket
batஐ, கதாயுதம் மாதிரி வைத்துக் கொண்டு, களம் இறங்கினால் யாரால்தான்
என்ன செய்ய முடியும்? இங்குதான் அனுபவம் வேலை செய்தது.

மதன்லால் என்றொரு வீரர். பூர்வாசிரமத்தில் பௌலராகவும் இருந்தவர்.
வ்ருத்தாப்யத்தின் காரணமாக வானப்ரஸ்தம் மேற்கொண்டு, வாக்கிங் சென்று
கொண்டிருந்தவரை, கைத்தாங்கலாக லண்டன் கொண்டு வந்து, கையில் பந்தைக்
கொடுத்து வீச வைத்தனர். அவரிடம் மீதமிருந்தவை, தேசபக்தியும், பால
ப்ராயத்தில் கைகளைச் சுழட்டி பந்து வீசும் சில ஞாபகங்களும் தான்.
என்றாலும், தன்னை விடவும் வயதில் மூத்த, மஹாத்மா போன்றவர்கள்,
நாட்டுக்கே சுதந்திரம் வாங்கியிருந்த சில விஷயங்கள், அவரை தைரியப்
படுத்தியிருந்தன.



பொதுவாகவே வேகப் பந்து வீச்சாளர்கள் என்றால், கண்ணை மூடிக் கொண்டு,
அசுர வேகத்தில் வந்து, நட்ட நடு பிட்சில், பிள்ளையாருக்கு சிதறு காய்
விடுவது போல், பந்தை பலம் கொண்ட மட்டும் ஓங்கி எறிவது வழக்கம்.
ப்ராரப்தம் அல்லது தசா, புக்தி, அந்தரங்கள், சாதகமாக இருந்தால், பந்து
சரியான திசையில் தெறித்து, விக்கெட்டை வீழ்த்தும். அவையே batsmanக்கு
சாதகமாக இருந்தால், விளாசப் படும்.



மதன்லாலும், இதற்கு விதிவிலக்கல்ல. பால்ய ஞாபகங்கள் உத்வேகத்தைத் தந்து,
அடுத்த தெருவில் இருந்து, அரக்க பரக்க ஓடி வந்து, முக்யமான
ஜனஸ்தானத்தில், உடம்பின், த்ரவங்கள் எல்லாம் உலர்ந்து போனதில், கண்கள்
இருண்டு, நாக்கு தள்ளி, அவரை அறியாமல், பந்து, கையிலிருந்து விடுபட்டு,
ஏதோ நலுங்கில் தேங்காய் உருட்டுவது போல், batsman நோக்கி சென்றது.
இவர், ஓடி வருவதை வைத்து, பந்து, மார்பளவு எகிறி வரும் என்று
எதிர்பார்த்து, இனம்புரியாத ஒருவித உற்சாகத்தில் இருந்த, அந்த தடியன்கள்,
கணுக்கால்களுக்கிடையில், சரேலென்று எலி போல் நுழைந்த பந்தை சமாளிக்க
முடியாமல், அய்யோ அப்பா என்று அலறி, ஒருவர் பின் ஒருவராக, ஆட்டமிழந்து
வெளியேற, நாம் பெருத்த சேதாரமில்லாமல், கோப்பையைக் கிளப்பிக் கொண்டு
வந்து விட்டோம்.

இப்பேற்பட்ட எலியைக் கொண்டு போய், எந்த பாவமும் அறியாத, பரம சாதுவான,
பிள்ளையாருக்குப் போய் வாகனமாகப் போட்டிருக்கிறோம். பிள்ளையார்
இதற்கெல்லாம் அசந்து விடுகிறவர் இல்லை. எவ்வளவு அஜாக்கிரதையாக
உட்கார்ந்து இருந்தாலும், அவர் பாட்டுக்கு அவர் வேலையைப் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறார்.

கணபதி அக்ரஹாரம் என்று ஞாபகம். கட்டைப் பிரும்மச்சாரியான, ஞானசம்பந்தரை
வற்புறுத்தி, திருமணம் செய்விக்க முனைகின்றனர். அவர் ஒரு நிபந்தனை
விதிக்கிறார். திருமணம் அன்று மனைவியோடு கைலாச பதவி அடைய வேண்டும்
என்று. பாவம், அவருக்குத் தெரியவில்லை, திருமணம் என்றாலே மோட்சம் அடைவது
போலத்தான் என்று. எதைக் கேட்டாலும் தலையாட்டும் சிவபெருமான், அவர்கள்
மட்டுமல்லாது, யார் யாரெல்லாம் அன்று அக்கோவிலுக்கு வருகிறார்களோ,
அனைவருக்கும் கைலாச பதவி தருவதாக வாக்குறுதி தருகிறார்.

விஷயம் விஷம் போல் பரவுகிறது. கடல் கடந்து கூட மனிதர்கள் வந்து
குவிகிறார்கள். எங்கு பார்த்தாலும் ஜனத்திரள். நேரம் நெருங்குகிறது.
மக்கள் அடித்துப் பிடித்து ஓடி வருகிறார்கள். பலருக்கு வழி தப்பி
விடுவோமோ என்று சந்தேகம். வழியில் ஒரு விநாயகர் அமர்ந்திருக்கிறார்.
வழக்கம் போல நிச்சலனம். அமைதி. ஆனந்தம். மௌனம். புன்னகை வழியும் முகம்.
ஓடி வருபவர்களிடம் உட்கார்ந்த வாக்கிலேயே (கல்லுப் பிள்ளையாரல்லவா),
அழகான பெரிய கண்களை உருட்டி, காதுகளை விடைத்து, வலது பக்கம் இருக்கும்
சிவன் கோவிலுக்குப் போங்கள் என்று வழி காட்டுகிறார். அப்படியும்
சிலருக்குப் புரியவில்லை.

அவர்களுக்காக, தும்பிக்கையால் வழி காட்டுகிறார். அவசரமாக மோட்சம் போக
வேண்டுபர்கள், வலது பக்கம் போகுமாறு, பணிக்கிறார். அவசரமாக வேறு ஏதேனும்
போக வேண்டுபவர்கள், இடது பக்கம் இருக்கும், குளக்கரையை நாடுமாறு அவர்
கூறவில்லை. மனிதனுக்கு, மோட்சத்திற்கு மட்டுமே வழி சொல்ல
வேண்டியிருக்கிறது.

எவ்வளவு விநாயக மூர்த்திகள்? ஸ்வேத விநாயகர் (எ) வெள்ளை விநாயகர்,
பொல்லாப் பிள்ளையார், வெயிலுக்கு உகந்த விநாயகர், கற்பக விநாயகர்,
எல்லாருக்கும் தனித்தனி கதை இருக்கிறது. இப்போது, திருட்டுப்
பிள்ளையாரைப் பற்றிப் பார்க்கலாம்.

தேவாசுர யுத்தம் என்பது அலுக்காமல் எல்லாப் புராணங்களிலும் நடந்து
கொண்டே இருக்கிறது. பலகீனமான தேவர்கள், அவர்களிலும், பலமான அசுரர்களிடம்
மாட்டிக் கொண்டு, தமிழ் சினிமா மாதிரி, ஏதேனும் தகிடு தத்தம் செய்து,
கடைசியில் ஜெயித்தும் விடுகிறார்கள்.

பத்மனாபபுரத்தில் புதையல் இருப்பது தெரிந்தது போல, யாரோ,
பாற்கடலுக்குள், அமிர்தம் இருப்பதைக் கண்டுபிடித்து சொல்ல, அங்கே
'தேமேனென்று' உறங்கிக் கொண்டிருந்த, பெருமாளை, மெனக்கெட்டு எழுப்பி,
"பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்" என்று விரட்டி விடுகிறார்கள். அவ்வளவு
பெரிய கடலைப் பார்த்ததும், தேவர்களுக்கு, மயக்கம் வருகிறது. இதைப் போய்
எப்படி கடைவது? புத்திமானான, குரு பகவான், அசுரர்களைக் கூட்டுச்
சேர்த்துக் கொண்டு, பிறகு சுலபமாக ஏமாற்றி விடலாம் என்று யோசனை கூற,
ஆசையில் விழுந்த அசுரர்களும், மாங்கு மாங்கு என்று, கடலைக் கடைந்து,
கடைசியில் அமிர்தமும் கிடைத்து விடுகிறது.

தேவர்கள் அசுரர்களை ஏமாற்றப் போகிற விஷயம் எப்படியோ வெளியில் கசிந்து
விட, மறுபடியும், தேவாசுர யுத்தம் துவங்குகிறது. தேவர்களும்,
அசுரர்களும், சகட்டுமேனிக்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சண்டையில் கலந்து கொள்ளாதவர்கள், குறிப்பாக குழந்தைகள், குறுக்கும்
நெடுக்கும் ஓடுகிறார்கள். சனாதனத்தில் ஒரு சௌகரியம் உண்டு. நண்டு,
சிண்டு, படி, மரக்கால் என்று சகல சைஸிலும் கடவுள்கள் உண்டு. இந்த
யுத்தத்திலும், குழந்தைசாமிகள், குறிப்பாக, பிள்ளையார், முருகன், ஐயப்பன்
என்றெல்லாம், அப்பாவிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஐயப்பன் ரொம்பவும் குழந்தை. முருகனுக்கு, மயிலை யாரேனும் கிளப்பிக்
கொண்டு போகாமல் இருக்கணும். பிள்ளுக்குட்டிக்கு எந்த கவலையும் இல்லை.
அதன், வாகனத்தைக் கூட யாரும் சீண்ட மாட்டார்கள். பெருத்த தொப்பையில்
நிற்காது, நழுவிக்கொண்டே இருக்கும், பஞ்சகச்சத்தை ஒரு கையால் பிடித்துக்
கொண்டு, இன்னொரு கையால், சண்டையிடுபவர்களைத் தள்ளிக் கொண்டு,
குறுக்கும் நெடுக்குமாக அலைபாய்கிறது பொல்லாது. அப்பம், முறுக்கு என்று
ஏதேனும் தின்னக் கிடைக்குமா என்று ஒரு தேடல். முகத்தில் விஷமம் வழிகிறது.
ஆவணி அவிட்டம் அன்று, கள்ளப் பூணல் போட்டுக்கொண்டு, முகத்தில்,
வெட்கமா, பெருமிதமா என்று கண்டுபிடிக்க முடியாமல், தானே வரவழைத்துக்
கொண்ட, ஒரு பெரிய மனிதத் தோரணையில் அலையும் குழந்தைகள் போல், ஒரு
கள்ளச் சிரிப்பில், தேவ அசுரர்கள் கால்கள் நடுவில், சர்வ இம்சையாக
புகுந்து புகுந்து வந்து கொண்டிருந்தது கடைசியாகப் பார்த்த போது.

இந்திய அணியின் பவிஷு 40வது ஓவரிலேயே தெரிந்து விடுவது போல, தேவர்கள்
தோற்பதும் லேசாக தெரியவாரம்பிக்கிறது. அசுரர்கள், கடைசியில் ஜெயித்தே
விட்டார்கள். அமிர்தத்தைக் கையகப் படுத்தப் போனால், யாக குண்டத்தில்,
நடுவில் வைத்திருந்த அமிர்தக் கலசத்தைக் காணவில்லை. யாரோ கிளப்பி
விட்டார்கள். மறுபடியும் சண்டை போடலாம் என்றால், தேவர்கள்,
த்ராணியில்லாமல், ஓடி ஒளிந்து விட்டார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை.
யார் கொண்டு போனார்கள் என்று. ப்ரபஞ்சம் முழுக்கத் தேடியாகி விட்டது.
அமிர்தம் கிடைக்கவில்லை.

மறுபடியும், ப்ரகஸ்பதியானவர் உதவிக்கு வருகிறார். அவரும்,
அசுரர்களுக்குப் பயந்து பதுங்கியிருப்பவர்தான். உச்சகட்ட பயத்தில்
இருக்கும், தேவேந்திரனிடம், அறிவை உபயோகிக்குமாறு கூறுகிறார். தேவர்கள்
அனைவரும், ரகசியமாக ஓரிடத்தில் கூடி, மஹாசரஸ்வதியைப்
பிரார்த்திக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு யோசனை உதயமாகிறது.

சம்பவம் நடந்த இடத்தில், முதலில் எவ்வளவு நபர் இருந்தனர், முடிவில்
எவ்வளவு நபர் இருந்தனர் என்று கணக்கிட்டனர். ஒரு எண்ணிக்கை குறைந்தது.
அலசி ஆராய்ந்ததில், அது விநாயகர் என்று புரிந்தது.

இப்போது சர்வ நிச்சயமாக தெரிந்து விட்டது. இது பிள்ளையார் வேலைதான்.
அசுரர்களை ஜெயிப்பதற்கு இந்த அமிர்தம் ஒன்றையே தேவர்கள் நம்பியிருந்தனர்.
அமிர்தத்தை, பிள்ளையார் ஏதோ பால்பாயசம் என்று நினைத்து கபளீகரம்
செய்யாமல் இருக்கணும் என்று வேறு பயம் தொற்றிக்கொண்டது. அவ்வளவு பெரிய
தும்பிக்கையை வைத்து, ஏதோ மூக்குப்பொடி உறிஞ்சுவது போல், உறிஞ்சி
விட்டாரென்றால், தேவர்களுக்கு, உள்ளங்கையில், ஒரு உத்துருணி கூட வராது.
பச்சை கல்பூரம் எல்லாம் போட்டு, வாசனையாக, கொஞ்சம் பதமாக வேறு இருந்தது
அமிர்தம்.

பிள்ளையாரை அனத்து உலகங்களிலும் தேடியாகி விட்டது. அவரா அகப்படுகிறவர்?
தேவர்கள் எல்லாம் சேர்ந்து, சிவபெருமானிடம் போய் ப்ராது கொடுத்தனர்.
அவரே கொஞ்சம் களைத்துத்தான் இருந்தார். பிள்ளையாரிடம் அவருக்குக்
கொஞ்சம் பயம் கூட. ஆரம்பத்தில் இருந்தே அவர் கொஞ்சம் விஷமம்.
பொதுவாகவே, கொழுக்கு முழுக்கென்று, குள்ளமாக, துறுதுறுவென்று
இருப்பவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என்பார்கள்.
சிவபெருமான், தேவர்களிடம், விநாயகர், தன் பேச்சையெல்லாம் கேட்பவர் அல்ல
என்றும், பக்தர்கள் பேச்சை மட்டுமே கேட்பவர் என்பதால், அவரைப் ப்ரர்த்தனை
செய்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் கூறிவிட்டார்.

தேவர்களும் வேறு வழியின்றி, விநாயகரை நோக்கிக், கடுமையாகத் தவம்
இருந்தனர். கடைசியில், கணேசர் மனம் இளகி, தான் இருக்கும் இடத்தைத்
தெரியப் படுத்தினார். தென் கோடியில், காவிரி தீரத்தில், ஒரிடத்தில்,
அமிர்த குடத்தோடு அவர் அமர்ந்திருந்ததைக் கண்ட தேவர்கள் அதிசயித்தனர்.
அவர்களும் சரி, அசுரர்களும் சரி, உலகம் முழுதும் தேடினாலும், எல்லாப்
பெரிய மனிதர்களும் போல, தென் பிராந்தியத்தை அலட்சியப் படுத்தி
இருந்தனர்.

அவரவர், இப்போது கிடைத்த வாகனத்தில், அமிர்தம் இருக்கும் இடம்
விரைந்தனர். வழக்கம் போல, வழியில் இருந்த, விநாயகரைத் தவிர்த்து, அமிர்த
கலசம் நோக்கி முன்னேறினர். என்ன ஆச்சர்யம்? கலசம் இப்போது சிவ லிங்கம்
ஆகி விட்டிருந்தது. எல்லாரும், சிவபெருமானை வேண்ட, அவருக்கும் இது
மிகவும் ஆச்சர்யத்தைத் தந்தது. இத்தனை வருடங்களில் அவருக்கு யாரும்
அமிர்தம் மாதிரியான உயர் பண்டங்களைக் கொடுத்ததில்லை. எதையேனும்
கடைந்தால் கூட, வெண்ணை வந்தால் கிருஷ்ணனுக்கு, விஷம் வந்தால் சிவனுக்கு,
என்று சிவபெருமானைக் கொஞ்சமும் கலந்தாலோசிக்காமல், எழுதப் படாத ஒரு
ஒப்பந்தம் நிலவியது. மறுபடியும், விநாயகரையே துதிக்குமாறு கூறினார்.



தேவர்கள், தமது தவறை உணர்ந்து, மறுபடியும் வழிபட, விநாயகர், மனம் இளகி,
சிவலிங்க ஸ்வரூபத்திலிருந்த அமிர்தத்தை தேவர்களிடம் தந்தருளினார்.

இப்படியாக, லோக க்ஷேமத்திற்காக அமிர்தத்தைக் கவர்ந்து சென்றதால், அவர்,
அவ்வூரில், "கள்ள வாரணம்" என்று புகழ் பெற்றார். அமிர்தமே லிங்கமாக மாறிய
திருமேனி, "அமிர்தகடேசர்" என்று புகழ் பெற்றது. அந்தத் தலம்தான், புகழ்
பெற்ற "திருக்கடையூர்". அங்கே இன்னம், கள்ள வாரணப் பிள்ளையாருக்கென்று
தனி சன்னிதி அமையப் பெற்று இருக்கிறது.



இவ்வாறு, பிள்ளையார், உலக நன்மைக்காக களவு செய்யப் போக, நம்முடைய
நன்மைக்காக, பிள்ளையாரையே களவு செய்கிற நிலைமை வந்து விட்டது தான் பெரிய
விபரீதம்.