Tuesday, May 4, 2021

பயணம்

இருபத்தி மூன்று மணிநேரம் விமானத்தில் பயணம்  என்பது கொடுமையான விஷயம்.  


நேரத்தை வீணடிக்க நிறைய பக்குவம் வேண்டும். நிறையத் தூங்கலாம் சற்று அசௌகரியத்துடன். இப்போது இளையவயதினர் போல் ஈ.புக் படிக்க முடிவதில்லை.  வயது மட்டும் காரணம் இல்லை.  என்னால் முடியவில்லை. 
நான் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
நீண்ட பயணம் என்றாலும் இரண்டே படங்கள். 

1. சண்டைக்கோழி2 . ரசனைகள் தேவைப்படாத முடிவும் காட்சிகளும் பார்ப்பவனாலேயே தீர்மானிக்கப்பட முடிகிற customized movie. கிட்டத்தட்ட அந்த மூன்று நாட்கள் லக்ஷ்மி நாவல்கள் மாதிரி.  சொல்வதற்கு ஒன்றுமில்லை. "இன்னா படம்பா.. விசாலு விசாலுதான் மச்சான்.. தூள் கிளப்பறான்டா மாமூ.. இன்னா ஃபைட்டுன்ற.. ஒன்டிக்கு ஒன்டி (ஒன்டிக்கு சின்ன 'ன' வா, பெரிய 'ண' வா... சமீபமாக spellingல் நிறைய சந்தேகங்கள் வரவாரம்பித்திருப்பது நல்ல ஆரோக்யத்தின் அறிகுறியன்று).
2. ஒரு கிடாயின் கருணை மனு...

விமானத்தின் தமிழ் அகராதியில் நான்கு படங்கள் தான் இருந்தன. ச.கோழி2, பாஸ்கர் என்னும் ராஸ்கல், கிடாய் மற்றும் பரியேறும் பெருமாள்.

நான் பாஸ்கரைத்தான் பார்ப்பதாக உத்தேசம். விலாவின் விளிம்புகளில் கிச்சுகிச்சு மூட்டுகிற படங்கள் நீண்ட பிரயாணங்களுக்கு உகந்தவை. ஆனால் இந்த பாஸ்கருக்கும் பழைய சந்தானம் பாஸ்கருக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கிற மாதிரி தெரியாததாலும், படம் ஆரம்பித்து டைரக்டர் பெயர் போடுவதற்கு முன்பே மானிட்டரின் தொடு திரையில் என் கிரக சஞ்சாரம் காரணமாக கோளாறு ஏற்பட்டதை சகுனத்தடைமாகக் கொண்டு ச.கோழியை சாங்கோபாங்கமாகப் (இதற்கு என்ன அர்த்தம்? ) பார்த்து முடித்தேன். இதற்காக உள்மனதில் நம்மூராட்களுக்கு சேவை செய்ய வேண்டிய துர்ப்பாக்கியத்திற்காக வருத்தப்படுகிற அந்த மனிதன் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டியிருந்தது.
ச.கோழியைத்தவிர்த்து என்னிடத்தில் வேறு சாத்தியங்கள் இருக்கவில்லை.  பரியேறும் பெருமாள் நல்ல விமரிசனங்கள் கொண்டிருந்தாலும் பிரயாணத்திற்கான படம் என்று தோன்றவில்லை.  கிடாயை நான் கேள்விபட்டதே இல்லை. 

வேறு வழியில்லாமல் ச.கோழிதான் பார்க்க வேண்டியிருந்தது என்று பேசும்போது சபை நடுவில் கூசாமல் பொய் சொல்லலாம்.  எழுத்து நாகரீகத்தில் பொய் சொல்வது கூச்சமாயிருக்கிறது. உள் மனதில் ச.கோழி பார்க்க ஆசைப்பட்டு சப்புக்கொட்டிக்கொண்டுதான் பார்த்தேன். சமீப காலங்களில் ரகளைகள் ரசனைகளை மீறுவது ஆபத்தானது என்றாலும் பேட்ட, விசுவாசம் எல்லாம் சப்தமில்லாமல் பார்த்தாகி விட்டது.

2. லண்டனை விட்டுக் கிளம்பும் போது கிட்டத்தட்ட பிரயாணம் இருபது மணிநேரங்களை விழுங்கியிருந்தது. இந்த இருபது மணிநேரம் என்பது பதினோரு மணிநேரப் பிரயாணம்,  இரண்டு இடங்களில் இலக்கற்ற காத்திருத்தல், அமர்ந்த நிலையில் அசதி உறக்கம்,  பொருத்தமற்ற உணவு, உடன்பாடற்ற தேநீர்,  உபாதைகள் மற்றும் மற்றும் மற்றும் சண்டைக்கோழி2.  சண்டைக்கோழி1 என்பது நல்ல படம் என்றாலும் , என்னையும் என் மனைவியையும் அது ஒரு குறியீடாக உணர்த்துவதில் அந்தக் கருத்து ஒரு மாற்று முதன்மைத்துவம் பெற்று விடுகிறது.
39ம் நம்பர் சீட்டு என்றவுடனே சுதாரித்திருக்க வேண்டும். சரியாக நாங்கள் ரொம்ப நாகரீகம் பார்த்து நாசூக்காக நகர்ந்து சென்றதில் (அசமஞ்சம் என்று தெலுங்கில் சொல்வார்களாயிருக்கும்) எங்களுக்கு முன்பே ப்ரயாணிகள் நிரம்பி இருக்கைகளின் மேலே இருந்த பரண்களை நிரப்பியிருந்தார்கள். சோதனையாக 39 தொடங்கி 45 வரை நடு வரிசையில்  (எங்களுடையது) பரண்கள் இல்லை. அதை மழைநீர் சேகரிப்பிற்காக நேர்ந்து விட்ட மாதிரி பொருள்படும்படி அந்த அவன் பெருமையடித்துக் கொண்டான்.  நல்ல வேளையாக 37ம் நம்பர் பரண் காலியாக இருந்தது. நான் கார்ல் லீவிஸ் மாதிரி எட்டுக்கால் பாய்ச்சலில் தாவி, யார் காலையோ நடுவில் பதம் பார்த்து  (indecent fellow) மன்னிப்பு கோர அவகாசமில்லாமல் என் இரு பெட்டிகளையும் அந்தப் பரணில் வைத்து மீண்டேன். இந்தக் குறுகிய கால அவகாசத்தில் என் மனைவியின் வாயிலாக ரகுவம்சத்திற்கும்  முற்பட்ட என் பரம பாட்டனார்களின் கையாலாகாத்தனமெல்லாம் பக்கத்தில் தேமேனென்று இருந்த ஜப்பான்காரன்கள் செவிப்பறையெல்லாம் நுழைந்து மீண்டன.  ஜப்பான்காரன் என்பதெல்லாம் உத்தேசமாகச் சொல்வதுதான். உண்மையில் சீன, கொரிய,  ஜப்பான் காரன்களையெல்லாம் பகுத்தறிகிற புத்திசாலித்தனம் என்னிடத்தில் இருந்ததில்லை.  எந்த புத்திசாலித்தனமும் என்னிடத்தில் இருந்ததில்லை என்று புத்திசாலியான என் மனைவியின் கூற்றில் உண்மைகள் இல்லாமல் இல்லை.  தக்க தருணத்தில் அவளை ஏமாற்றிய தந்திரத்தை புத்திசாலித்தனம் என்று நினைத்து  தான் ஏமாந்து விட்டதாக அவள் அங்கலாய்ப்பு எனக்குள் அவ்வப்போது புன்னகையை ஏற்படுத்துவது உண்டு.

ஒரு சிறிய ஆசுவாசத்திற்குள் 37ம் நம்பர் மனைவியுடன் வந்து விட்டான். நடுவயது ஆனால் என்னைவிடவும் மிகவும் இளையவனாக இருந்தான். கஷ்கம் தெரிகிற மாதிரி T Shirt அணிந்திருந்தான். அதற்கு அவனது தினவெடுத்த புஷ்டியான புஜங்கள் காரணமாக இருந்திருக்க வேண்டும்.  இந்த மாதிரி ஆட்கள் கூடைப்பந்து விளையாட அல்லது தேச சேவை உத்தேசித்து மிலிட்டரியில் சேர்ந்திருக்கலாம். ஒலிம்பிக்கில் தட்டெறியப் போயிருக்கலாம்.  இப்போது பெட்டி எறிகிற துரத்தில் நெருப்பைக் கக்குகிற விழிகளில் என்னை ஊடுருவி மீள்கிறது அவன் பார்வை.

அவனுக்குப் பட்டா போட்டுக் கொடுத்த இடத்தை அபகரித்த போக்கிரி யார் என்கிறது ஆங்கிலம். நான் போக்கிரியெல்லாம் இல்லை என்று சாதுவாக அறிக்கையிட முற்படுகிற என் கோழைத்தனத்தை அணைகட்டுகிறது என் மனைவியின் ஒரு சிறு கனைப்பு. நான் வழக்கம் போல அடங்கி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறேன். அவன் கர்ஜனை தொடர்கிறது. அந்த அவனைக் கூப்பிட்டு கூப்பாடு போட அவன் அமைதியாக இவனது உடமைகளை எடுத்து வேறிடம் செல்கிறான். ஆனாலும் அவன் சமாதானம் அடையவில்லை.  பொதுவாக எங்கள் பக்கம் அவன் தாய் மொழியில் என்னமோ சொல்கிறான்.  என் பாட்டனார்களுக்கு யோக காலம் என்று தோன்றியது. திதி கொடுக்கும் நாட்களைத்தவிரவும் நிறைய நாட்கள் என் மனைவி மட்டுமின்றி நிறையப் பேர் அவர்களை நினைத்துக் கொள்கிறார்கள்.  அவன் காது கூசாத வார்த்தைகளை உகுக்கிறான் என்பது அவன் மனைவி தன் காதுகளை நாசூக்காக மூடிக்கொண்டு அவனை அமைதிப்படுத்த முனைவதில் தெரிகிறது. நான் தமிழ் நாட்டில் பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன். வேறு மாநிலங்களில் பிறந்திருந்தால் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ள நேரிட்டு என் பாட்டனார்களுக்கு நேர்ந்த அவலத்தில் பங்கு கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

3. லண்டன் விமான நிலையத்தில் 3  மணிநேரம் கிடைத்தது. அது பரிச்சயமான விமானநிலையமானதால் சங்கடங்கள்  இல்லை  என்று சொன்னதை என் மனைவி ரசிக்கவில்லை. உண்மையில்  ஒன்றுமே புரியவில்லை.  நல்ல வேளையாக மனைவி கூட இருந்ததில் பாதுகாப்பு சோதனை கடந்து கதவு நம்பர் தெரியாமல் அறிவிப்பு பலகை அருகே அமர்ந்து கொண்டோம். எங்கள்  அருகே கழிப்பறைகள் வேறு இருந்தன. திரளான ப்ரயாணிகள் வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்தாலும் ஒரே மாதிரி வேதனை ததும்பும் முகங்களில் நுழைந்து திருப்தியாக திரும்புவது நன்றாக இருந்தது. " கருமம்" என்று என் மனைவி தலையில் அடித்துக் க கொண்டாள்.

ஒரு வழியாக B35 செல்லுமாறு பணிக்கப் பட்டோம்.

 நாங்கள் விழுந்தடித்துக் கொண்டு அரைமைல் நடந்து கதவை அடைந்து எங்கள் வரிசையில் நுழைந்து கொண்டோம். இன்னொரு தெலுங்குக்காரனிடம் அடிவாங்கும் திராணி இல்லை. எங்கள் துரதிர்ஷ்டம் ஒரு பழைய யுவதி வந்து அடிக்காத குறையாக  அடித்து விரட்டினாள். இருபது நிமிடம் முன்னால் வந்தால் போதும் என்று சொன்னதால் நானும் என் மனைவியும் ப்ராக்கு பார்க்க அருகாமையில் இருந்த கடையில் நுழைந்தோம்.
அப்படியும் நேரம் போகவில்லை.  விரட்டினாலும் பரவாயில்லை என்று மறுபடியும் வரிசையின் வெளியே நின்று கொண்டு பரிதாபமாக எட்டிப் பார்த்தோம்.

உள்ளே இருந்து  ஒருவன் வந்து  எங்களிடம் என்ன என்று அதட்டினான். நான்  என் கையில் இருந்த போர்டிங் பாஸை அநிச்சயமாக அவனிடம் நீட்டினேன். அவன் அதைப் பார்த்து விட்டு oh my God என்றான். இவ்வளவு நேரமாக கூப்பிடுகிறோம் எங்கே சென்றீர்கள்  என்று கடிந்து கொண்டான். நான் காரணம் கேட்ட போது  என் பாஸில் இருந்த ஒரு குறியீட்டை சுட்டிக் காட்டி நான்காம் நம்பர் வரிசையில் போய் நிற்கச் சொன்னான். நாங்கள் இருவரும் அவ்விடம் விரைந்தோம். அங்கே  ஏற்கனவே ஓரிருவர் நின்று கொண்டிருந்தனர். எங்களுக்கு மனம் பரபரப்பாக  இருந்தது.  ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று உள் மனம் கூறியது. நாங்கள் நின்ற வரிசையில் upgrade  என்று எழுதியிருந்தது. என்றால் எங்களுக்கு முதல் வகுப்பு கிடைக்கப் போகிறது செலவில்லாமல். ஓவென்று கத்தலாம் போல இருந்தது.  என் பாஸை கைவிரல்களிடையே ஸ்டைலாக சுழற்றியபடி வெளியே நேரமாகாததால் காத்திருப்பவர்களை ரகசியமாக நோட்டம் விட்டேன்.  எல்லோரும் எங்களையே பொறாமையாகப் பார்ப்பது பெருமையாக  இருந்தது.  அப்போது தான் என் மனைவியின் பாஸைப் பார்த்து கடவுளே என்று அலறினேன். அவள் பாஸில் அந்தக் குறியீடு இல்லை.  என்றால் எனக்கு மட்டும் தான் முதல் வகுப்பு கிடைக்கும்.  அவள் எகானமிதான். அவள் முகம் சுணங்கி விட்டது.  இது சரியா வராதுப்பா என்றாள். கிடைச்சா ரெண்டு பேருக்கும் கிடைக்கட்டும்.  இல்லேன்னா வேண்டாம்னு சொல்லிடுவோம் என்றாள். சரி என்றவாறு எங்களை அழைத்த பெண்ணிடம் சென்றோம். என் மனைவி அவளிடம் தானும் செல்லலாமா என்று கேட்க, அவள் முதலில் மறுத்து, பின்பு உடன் பட்டாள். மறக்காமல்  என் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டாள்.

நாங்கள் ஒரு நீண்ட பாதையில் அழைத்துச் செல்லப் பட்டோம். போகுமுன் வெளியில் தவிப்போடு நின்றிருந்த சகபயணிகளைப் பார்த்து புன்னகைக்க மறக்கவில்லை நான்.

சிறிது நேர நடை ஒரு அறையில் முடிந்தது. அதன் வெளியே விமானத்தின் நுழைவு வாயில் திணிக்கப் பட்டிருந்தது.

அந்த அறையில் முன்னம் நுழைந்த மூவர் இருந்தனர். கடும் சிவப்பில் இருந்த ஒருவன் என்னைக் கூப்பிட்டான். நான் பெட்டிகளை மனைவியிடம் கொடுத்து விட்டு செல்ல, அவன் மறுத்து அவைகளைக் கொண்டு வரச் சொல்லி வேறொருவனிடம் கொடுக்க அவன் ஒரு மரியாதை நிமித்தம் கூட என் அனுமதி பெறாமல் அவைகளைத் திறந்து  உள்ளாடைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வெளியே எறிந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தேன்.

இப்போது அந்த சிவப்பு மனிதன்  என்னை ஒரு பெஞ்சில் கிடத்தி வைத்தியர்கள் வயதானவர்களிடம் ஹெர்னியா பரிசோதிப்பது போல் பரிசோதித்தான். அவனே இன்னொருத்தனிடம் என்னை ஒப்படைத்தான். அவன் என்னை நன்றாகக் கவிழ்த்து   ஜியாமெட்ரி பாக்சில் ரப்பர் தேடுவது போலத் தேடி, ஒருவழியாக போய் வா என்றான். நான் பதட்டத்தில் வெளியே வந்தால் மற்ற பயணிகள் சாரிசாரியாக விமானத்தில் ஏறிக் கொண்டிருந்தனர். இப்போது அந்தப் பெண் ஓடிவந்து ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து என் மனைவியிடம் அவளுக்கு சோதனை தேவையில்லை என்று கூறி விட்டாள்.

நான் தடுமாற்றத்துடன் மனைவியைப் பிடித்துக் கொண்டு வந்து சரியான இருக்கையில் அமர்ந்தேன். இந்த முறை இருக்கையின் மேல் பரண் காலியாக இருந்தது.

பி.கு.
ஒரு கிடாயின் கருணைமனு தனியாகத் தொடரும்

2 comments:

  1. ஹாஹாஹா எங்கள் மலேஷிய, துபாய், ஜெர்மனி, யூரோப் பயணங்கள் நினைவில் வந்தன.செம சுவாரசியம்.

    நீங்கள் மன்னையில் எங்கே. சிவசங்கரன் என் கூட நான்காம் வகுப்புப் படித்தவரா. எங்கே இருக்கிறார். சந்தானராமனும் எங்கே இருக்கிறார்.

    அவர்கள் தொடர்பு எண்ணையும் உங்கள் எண்ணையும் என் வலைப்பூவில் பின்னூட்டத்தில் அளிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் மன்னையில் எட்டாம் வகுப்பு வரை கணபதி விலாஸிலும், அடுத்த இரண்டு வருடங்கள் NHSSலும் படித்தேன் . நீங்கள் சொல்வதை வைத்து நாம் இருவரும் எட்டாம் வகுப்பு ஒரே section ஆக சாத்தியங்கள் உண்டு. நாங்கள் மன்னையை விட்டு புலம் பெயர்ந்து 41 வருடங்கள் ஆகி விட்டன. சென்னை தான். உத்யோகம் நிமித்தம் தற்போது கோவையில் இருக்கிறேன். அடிக்கடி மன்னை செல்லும் வாய்ப்பு உண்டு.
      கடந்த சில வாரங்களாக மன்னை நண்பர்களுடன் தொடர்பு கிட்டி இருக்கிறது. V கணேசன், R கணேசன் (இவன் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறான். தெய்வ மகள் என்னும் தொடரில் காமெடி கதாபத்திரம். சிவசங்கரன் இங்கு கோவையில் தான் இருக்கிறான். 9444219883. சமீபத்தில் பேசினேன். சந்திக்க வில்லை. சந்தான ராமன் பற்றி தகவல் இல்லை. மிக்க மகிழ்ச்சி.
      my number is 8920943515.

      Delete